மத்திய, வடகிழக்கு மற்றும் வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்க நிலை வலுவடைந்து வருவதனால் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடக்கம் மத்திய, வடகிழக்கு மற்றும் கிழக்கு வங்காள விரிகுடா பிரதேசத்தில் வடக்கு அச்சரேகை 06 – 16 மற்றும் கிழக்கு அச்சரேகை 83 – 96 வலையத்திற்குள் குறைந்த தாழ்வு வலையம் வலுவடைந்துள்ளது.
இந்த பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடிய நிலை இருப்பதினால், பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்றொழில் படகுகள் இந்த பிரதேசத்தில் இருந்து வெளியேறி பாதுகாப்பான கடல் பிரதேசத்தை நோக்கி செல்லுமாறு அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் இதன் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது.
இதேபோன்று நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதியில் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 69 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக கடற்றொழிலுக்காக செல்லும் படகுகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.