டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்ய ஹேக்கர்கள் செயற்பட்டுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக ரஷ்யாவின் ஜி.ஆர்.யு இராணுவ உளவுத்துறை, இணைய உளவு நடத்தியதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒலிம்பிக், எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னர் இந்த தாக்குதல்கள் நடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சைபர் தாக்குதல்களின் தன்மை அல்லது அளவை அதிகாரிகள் விரிவாக குறிப்பிடவில்லை.
அதே நேரத்தில், அமெரிக்க நீதித்துறை, ஆறு ரஷ்ய ஜி.ஆர்.யு அதிகாரிகள் மீது சைபர் தாக்குதல்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்த குழு 2018ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக், 2017ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் உக்ரேனின் மின் கட்டத்தை சீர்குலைக்க முயன்றது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, அமெரிக்க வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே ஜப்பானில் சைபர் தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இணையத் தாக்குதலால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஜப்பான் தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கட்டோ தெரிவித்துள்ளார்.