ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இந்திய மதிப்பில் 200 ரூபாய் என சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தொடங்க தீர்மானித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கான விலையினை, அதனை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு முதற்கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் ஒரு தடுப்பூசியின் விலை 200 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.
இதேவேளை கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பும் பணி நாளை காலை தொடங்கும் என்றும் சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.