ஒருவருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பல மாற்றங்களில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
ஆரம்பத்தில் வீட்டிலிருந்தே பணியாற்றும் சூழலை பெரும்பாலான நிறுவனங்கள் விரும்பாமல் இருந்தாலும், அதுதான் காலத்தின் கட்டாயம் என்பதால் பல புதிய விஷயங்களை அதில் புகுத்தின.
சில நிறுவனங்கள் ஊழியர்களின் வீட்டிலேயே அலுவலகப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து நீங்கள் வேலை செய்தால் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டன. இந்த பெரிய மனதுக்குப் பின்னால் நில லாபங்களும் இருக்கத்தான் செய்தன.
ஒரு கட்டடத்தை வாடகைக்குப் பிடித்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை வரவழைத்து, மின்சாரம், துப்புரவுப் பணியாளர்கள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து, வரும் லாபத்தில் பெரும்பகுதியை செலவு செய்து கொண்டிருந்த நிறுவனங்கள், அடடா.. வீட்டிலிருந்தே பணியாற்றுவதால் இந்த அளவுக்கு வசதியா என்று வாயைப் பிளக்க ஆரம்பித்துவிட்டன.
அதன் எதிரொலி.. 2021 முழுக்க வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு தனது ஊழியர்களுக்கு பல நிறுவனங்கள் ஆணி அடித்தாற்போல சொல்லியேவிட்டன.
சரி நாம் நேராக விஷயத்துக்கு வரலாம். கொரோனா பெருந்தொற்றால் வீட்டிலிருந்தே ஊழியர்கள் பணியாற்றுவதால் கூகுள் நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட 74,062,150,000 ரூபாய் லாபமாம். அதாவது, வந்த வருவாயில் இந்த தொகை செலவிடப்படாமல் சேமிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு வகையில் பார்த்தால், கூகுள் நிறுவனத்துக்கு வரும் பல விளம்பரங்கள் குறைந்து விட்டதாகவும் கணக்கு சொல்கிறது.
கடந்த 2020 டிசம்பர்மாதத்தில் கூகுள் நிறுவன செயல் தலைவர் சுந்தர் பிச்சை, கூகுள் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே வேளையில், சுட்டுரை மற்றும் முகநூல் நிறுவனங்கள் போல நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படாது என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.