ஐ.பி.எல். ரி-20 தொடரின் 21ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ராகுல் திரிபத்தி 81 ஓட்டங்களையும் பெட் கம்மின்ஸ் ஆட்டமிழக்காது 17 ஓட்டங்களையும், சுனில் நரேன் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், பிராவோ 3 விக்கெட்டுகளையும், சேம் கர்ரன், சர்துல் தாகூர் மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 168 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஷேன் வொட்சன் 50 ஓட்டங்களையும், அம்பத்தி ராயுடு 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்த்தா அணியின் பந்துவீச்சில், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி, கமலேஷ் நாகர்கோடி, சுனில் நரேன் மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 8 பவுண்ரிகள் அடங்களாக 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ராகுல் திரிபத்தி தெரிவுசெய்யப்பட்டார்.