தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய மத்திய அரசுடன் பேச்சு நடத்துவதற்கான இராஜந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கான இந்தியத் தூதுவரை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடியபோது இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூட்டமைப்பு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பாக புதுடில்லியிலிருந்து உறுதியான பதில் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை டெல்லிக்கு அழைத்துப் பேச்சு நடத்துவதற்கு பிரதமர் மோடி, முன்னர் இலங்கை வந்திருந்தபோது விருப்பம் வெளியிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றாலும் பின்னர் பயணம் பிற்போடப்பட்டது.
இதேவேளை, இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம், புதிய அரசமைப்பின் ஊடாக மாற்றியமைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்தில், புதிய அரசமைப்பின் ஊடாக தமிழர்களுக்கான தீர்வைப் பெறுவதற்கு இந்தியாவின் தலையீட்டைக் கூட்டமைப்பு கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு டெல்லி இராஜதந்திர மட்டத்திலான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.