வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் ஏற்கனவே மரணமடைந்துள்ள நிலையில் இன்று மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தொற்றாளர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதுடன் கொரோனா தொற்று சமூக தொற்றாக மாறும் சந்தர்ப்பத்தில் இந்நிலைமை இன்னும் மோசமடையலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலைக்கு மக்களின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் எனவும் ஆகவே பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுவதுடன் கொரோனா தொற்று அச்சம் நீங்கியதாக நினைத்து வெளியேறுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பினை தரும் மக்கள் ஒன்று கூடும் இடங்கள் அத்தோடு அக்கரைப்பற்று சந்தைப்பகுதியுடன் தொடர்புகளை தவிர்க்குமாறும் தொழிலுக்கு செல்லுகின்றவர்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம் கொரோனா தொற்றுள்ளவர்களுடன் அல்லது தொற்றுள்ள பிரதேசங்களுக்கு அடிக்கடி சென்றுவரும் நபர்கள் தொடர்பிலான தகவல்களை உடனடியாக பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 1248 ஆக அதிகரித்துள்ளதுடன் ஏழு பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கல்முனை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 830 ஆக உள்ளதுடன் கல்முனை தெற்கில் 186 பேராக உயர்ந்துள்ளதுடன் அதிகூடிய எண்ணிக்கையான 309 தொற்றாளர்கள்; அக்கரைப்பற்றில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.