வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரனுக்கும் இடையிலான சிநேக பூர்வ சந்திப்பு நேற்றிரவு(11) இடம்பெற்றது.
அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்டத்தில் தேர்தல் களத்தில் குதிக்கவுள்ள அனைத்து தமிழ்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியினை அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகவே அம்பாரை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் நாயகமுடனான சந்திப்பினையும் மேற்கொண்டது.
சிநேக பூர்வமாக இடம்பெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரனுக்கும் அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பான வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு மேற்கொண்டுவருகின்ற முயற்சிகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்பதாகவும் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்வது பொருத்தமானது எனவும் கூறினார்.