வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பல்வேறு செயற்பாடுகளில் அக்கரைப்பற்று பொலிசாரும்; ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கமைவாக இன்று அக்கரைப்பற்று மத்திய பஸ் தரிப்பிடத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முறையில் மாஸ்க் ஒன்றை அணிந்திடுபவராய் இருங்கள்’ எனும் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பஸ்களில் ஒட்டப்பட்டதுடன் விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்ட பின்னர் சுற்றுவட்டத்தின் அருகே அமைக்கப்பட்ட போக்குவரத்து பிரிவினரின் பொலிஸ் உப நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.
பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி பி.ரி.நசீரின் ஏற்பாட்டில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு எம் எஸ் பி விஜயதுங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜே.ரத்நாயக்க கலந்து கொண்டு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பிலும் மக்கள் மத்தியில் தெளிவூட்டினார்.
நிகழ்வில் அக்கரைப்பற்று உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப்குமார மற்றும் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்வைத்தனர்.
இதேநேரம் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுறுத்தல்கள் பொலிசாரால் வழங்கப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் மக்களுக்கு வழங்கி வைத்தனர்.