அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருக்கொடியேற்றத் திருவிழா நிகழ்வானது விநாயகர் வழிபாடு, கிராமசந்தி வாஸ்துசாந்தி எனும் கிரிகைகளுடன் நேற்று (26/03/2023) ஆரம்பமாகியாது,
மேலும் இன்றைய தினம் (27/03/2023) திங்கட்கிழமை திருக்கொடியேற்றம் நிகழ்வு பக்திபூர்வமாக சிறந்த முறையில் இடம்பெற்றது.
வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருக்கொடியேற்றத் திருவிழா நிகழ்வுகள் தினமும் பகல் நிகழ்வுகள் மற்றும் இரவு நிகழ்வுகள் என இடம்பெற உள்ளதுடன் (07/04/2023) திகதியன்று வைரவர் பூஜை கிரியையுடன் குறித்த பெருவிழா நிறைவு பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈழ வளதிருநாட்டின் கிழக்கே மீன்பாடும் தேனாடாம் மட்டு நகருக்குத் தெற்கே அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நகரிலிருந்து இருமைல்களுக்கு அப்பால் சாகாமம் வீதியில் பனங்காடு என்னும் பெயரில் அழகிய கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றி வற்றாத ஜீவநதியாக தில்லைநதி வளைந்து பாய்கின்றது. செந்நெல் விளையும் செழிப்பு மிகு வயல் நிலங்கள் நிறைந்து விளங்குகின்றன. கடல்,ஆறு, குளம் ஆகிய மூன்று நீர் நிலைகளும் முறையுற அமைந்து மேலும் இக்கிராமத்தை அழகூட்டுகின்றன.
இத்தகைய இயற்கை எழில்கள் நிறைந்த இக்கிராமத்தில் கிழக்கே முதலும் முடிவும் இல்லா முழுமுதற் பெருமான் ஸ்ரீ பாசுபதேசுவரர் என்ற நாமத்தோடு அன்னை ஸ்ரீ மாதுமை அம்பாள் சகிதம் வீற்றிருந்து அருள் பாலித்தருளுகின்றமை குறிப்பிடத்தக்கது.