வி.சுகிர்தகுமார்
சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் தங்கையா கிரோஜாதரன் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே இத்தீர்மானத்தை உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச சபையினை கடந்த இரு வருடங்களாக தமிழர் விடுதலை கூட்டணி சின்னத்தில் போட்டியிட்ட ஈரோஸ் ஜனநாயக முன்னணி கைப்பற்றி ஆட்சியமைத்து செயற்படுத்தி வந்தது. இந்நிலையில் அதன் தவிசாளர் க.பேரின்பராசா சுயவிருப்பில் அப்பதவியிலிருந்து விலகி கொண்டார். எனினும் அக்கட்சியிலிருந்த இன்னுமொருவர் தவிசாளராக தெரிவு செய்யப்படுவதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கடந்த வாரம் ஆட்சியை கைப்பற்றியதுடன் தவிசாளராக தங்கையா கிரோஜாதரனையும் தெரிவு செய்தது.
இந்நிலையிலேயே குறித்த கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து இன்று ஊடக மாநாட்டை நடாத்தினர். அத்தோடு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான முழு ஆதரவையும் மொட்டுகட்சிக்கும் அதன் வேட்பாளர் சிறியானி விஜேவிக்கிரமவிற்கும் வழங்குவதாக கூறினர்.
இங்கு கருத்து தெரிவித்த புதிய தவிசாளர் த.கிரோஜாதரன் கடந்த பிரதேச சபை தேர்தலில் நாம் வெற்றி பெற்றபோதும் ஆட்சியமைக்க முடியவில்லை. இந்நிலையில் அன்மையில் தவிசாளர் சுயவிருப்பில் பதவியிலிருந்து விலகியதன் காரணமாக நாம் ஆட்சியை கைப்பற்றினோம். இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசம் பாரிய அபிவிருத்தி தேவையுடன் காணப்படுகின்றது. ஆகவே தான் அபிவிருத்தி எனும் ஒரே அடிப்படை காரணத்திற்காக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மொட்டுக்கட்சியை ஆதரிப்பது என தீர்மானம் மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் எமது பிரதேசம் பல அபிவிருத்திகளை எதிர்காலத்தில் காணும் என்றார். மேலும் இனிவரும் காலங்களில் பிரதேச சபையின் அனைத்து விடயங்களும் வெளிப்படை தன்மையுடன் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் உறுப்பினர்களான அருள்ராஜா மற்றும் சானுயா ஆகியோரும் கருத்து வெளியிட்டதுடன் உறுப்பினர் சிந்துஜா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.